Wednesday, January 28, 2009

ஒன் ஷார்ட்

பிஷப் B மைதானத்தில் நடந்த 3rd டிவிஷன் கிரிக்கெட் மேட்ச். பயங்கர tense மேட்ச். ஒரு டீம் லீக் வின்னர்சுக்கும் இன்னொரு டீம் relegation அவாய்ட் பண்றதுக்கும் விளையாடறாங்க. தெரியாத்தனமா அம்பயரிங்க்கு போய் மாட்டிக்கிட்டேன். இவரு கூட வருவாருன்னு தெரிஞ்சி இருந்தா வீட்டுலயே நிம்மதியா இருந்து இருப்பேன்.தப்பு தப்பா டெசிஷன் கொடுக்கறது மட்டும் பத்தாதுன்னு ஏதாவது ஒரு டீம டார்கெட் பண்றா மாதிரி வேற வேல பண்ணுவாரு. மேட்ச் ஆரம்பிச்சு ஒரு மணிநேரம் கூட ஆகி இருக்காது. அவரும் ரொம்ப மோசமா எல்லாம் அம்பயரிங் பண்ணல.

நிச்சயமா அவுட் இல்ல. Padல பட்டு போவுது பந்து.

8 ஸ்டம்ப் வச்சி இருந்தா கூட பட்டு இருக்காது. இதுக்கு போய் LBW.

அவன் போட ஆரம்பிச்சதுலேந்து எல்லாமே நோ பால். அவரு சும்மா நின்னுக்கிட்டு இருக்காரு.

கொஞ்சம் கொஞ்சமா டார்ச்சர் ஆரம்பிச்சது பேட்டிங் டீம்கிட்டேந்து. மேட்ச் கண்டிப்பா ஜெயிச்சு ஆகணும். இல்லாட்டி அடுத்த வருஷம் 4th டிவிஷன்.

பந்த மிட்விக்கெட்டுக்கு அடிச்சுட்டு ரெண்டு ரன் ஓடினாங்க. ஒரு பேட்ஸ்மேன் கிரீஸ் கிட்ட வராமயே ரெண்டாவது ரன் ஓடினான். நான் "ஒன் ஷார்ட்" டிக்ளேர் பண்ணினேன். ஒரே களேபரம் ! "அவரு நோபால் கூட பாக்க மாட்டேன்கறார்" நீங்க என்னடானா ? கேப்டன் கூப்பிட்டு பேசி மறுபடியும் மேட்ச் ஸ்டார்ட் பண்ணினோம்.

பீல்டிங் டீம் மக்களோட தோள் மேல கைய போட்டுக்கிட்டு இவரு ஜாலியா பேச ஆரம்பிச்சாரு.
நீங்க கவலைபடாதீங்க மணி. இவனுங்க எப்போதும் இப்படி தான்.

திடீர்னு "நோபால்" அப்படின்னு சௌன்ட். யாருடானு பாத்தா ரன்னர் எண்ட்ல இருக்கற பேட்ஸ்மண் அம்பயரிங் பாக்கறாரு" . கூப்பிட்டு வார்ன் பண்ணி அனுப்பினோம்.

ஒருவழியா இந்த டீம் பேட்டிங் முடிஞ்சது. நல்லா பரோட்டா தின்னுட்டு தூக்க கலக்கத்துல வெயில்ல போய் நிக்கறோம்.

பிரமாதமா நியூ பால்ல பௌலிங் போட்டாங்க.
காலைல padல பட்டதுக்கே அவுட் கொடுத்தீங்க. இப்ப என்னடானா க்ளீன் நிக். இந்த சத்தம் கூடவா கேக்கல.
இத விட பழமா கால்ல வாங்க முடியாது. இது தான் LBW definition.

கொஞ்சம் கொஞ்சமா பேட்டிங் டீம் ரன் எடுக்க ஆரம்பிச்சானுங்க. வெயில் வேற கொளுத்திச்சு.

எல்லாத்துக்கும் அப்பீல். ஒரு ஓவர் போட பத்து நிமிஷம். எத எடுத்தாலும் ஆர்குயுமென்ட். கீப்பர் பேட்ஸ்மேன் கிட்ட தகராறு.

இதுக்கு நீங்க ஒன் ஷார்ட் கொடுத்து தான் ஆகணும். அவன் கிரீஸ் கிட்ட வரவே இல்ல. பவுண்டரி சிக்னல் பண்ணின போது ஒரு புண்ணியவான் வந்து என்கிட்ட மிரட்டினான்.

ஸ்கோரர் எந்த சிக்னலுக்கும் acknowledge பண்ணல. ஒவ்வொரு முறையும் அதுக்கு டிலே !

மணி அஞ்சரை. மேட்ச் முடிஞ்சபாடு இல்ல. எல்லாத்துக்கும் தகராறு. டிலே. ஒரு ஓவருக்கும் அடுத்ததுக்கும் நடுவுல எல்லா ப்ளேயரும் சேர்ந்து மாநாடு. அது முடிஞ்சவுடன "ஒன் ஷார்ட்" கேட்ட தலைவர் வந்து Bad Light கிளைம் பண்றாரு. எனக்கு பந்து சுத்தமா தெரியலயே ! நான் எப்படி போடறது !

இதே மாதிரி நின்னுக்கிட்டு இருந்தா மேட்ச் அவார்ட் பண்ணிடுவோம். பவுல் பண்ண ஆரம்பிங்க.
முடிஞ்சா பண்ணுங்க சார். நாங்க வெளில போனாதான அவார்ட் பண்ணுவீங்க.நாங்க இங்கயே தான் இருக்கோம்.

பவுலும் பண்ணாம, மேட்சும் விளையாடாம அஹிம்சா வழி போராட்டம்.

ஸ்டம்ப் புடுங்கி போட்டுட்டு A க்ரவுண்டுக்கு வேகமா ஓடி போனேன். (காலேஜ் நண்பர்கள் கிட்ட) இங்க ஒரே பிரச்சனை. ஸ்கோர் ஷீட் பிச்சி போட்டாங்க.

டீம் மேல கம்ப்ளைன்ட்.வருஷம் முடிஞ்சவுடன என்கொயரி. நெகடிவ் பாயின்ட்ஸ்.


எனக்கு பெங்களூர்ல வேல கிடைச்சது.
ரெண்டு வருஷம் கழிச்சி அசோசியேஷன்னுக்கு போனேன்.
"மணிகண்டன், நாளைக்கு அம்பயரிங் பாக்கறீங்களா ?போதும் சார். அன்னிக்கு பட்ட அவதியே" .

"பயப்படாதீங்க மணிகண்டன். மூணு மாசம் முன்னாடி ஒரு பிரச்சனைல யாரையோ வெட்டிட்டு முருகன் ஜெயிலுக்கு போய்ட்டான். இப்ப வேலூர்ல தான் இருக்கான்".
அந்த முருகன் தான் பவுண்டரிக்கு போன பந்துக்கு "ஒன் ஷார்ட்" கேட்டு தகராறு பண்ணின புண்ணியவான்.

Friday, January 23, 2009

அம்மி மிதித்து

ஆதிஷ்ட இமம் ஆஸ்மானம்

அஸ்மே வத்வம் ஸ்திராபவா


பெண்ணே ! இந்த அம்மிய போல நீ. உன்னோட குடும்பத்தை எவ்வளவு பேரு எம்பி மிதிச்சாலும் தாங்கிக்கணும். சந்தேகம் என்கிற பேய் குடும்பதுக்குள்ளார வராம பாத்துக்கணும். குடும்பத்தோட ஸ்திரதன்மைக்கு நீ பொறுப்பேத்துக்கணும். துன்பம் அளிக்க கூடிய நிலைகள் வாழ்க்கைல எவ்வளவு வந்தாலும் அத தாங்க கூடிய மனபக்குவத்த வளர்த்துக்கணும்.


***********************************************************************


மடையா :- அந்த காலத்துல இயற்கையோட ஒன்றி வாழ்ந்த பழங்குடியினர் எந்தொரு காரியம் செய்யறதுக்கு முன்னாலயும் கல்லு மேல ஏறி நின்னு உறுதிமொழி எடுத்துப்பாங்க. அத கல்யாணத்துல ஒரு சடங்கா கொண்டு வந்துட்டாங்க ! உடையாத கல்லு இருக்கணும் ! வீட்டுக்கு உபயோகமாவும் இருக்கணும் ! சோ, அம்மி. அம்மியும் ஒரு சீரே ! வரதட்சணை மாதிரி அம்மியவும் ஒழிக்கணும்.


*************************************************************************

பாத்து விழுந்துடாம நில்லு. புடவை தடுக்கிடபோகுது.

கேமரா பக்கம் பாருடி. நல்லா திரும்பிப்பாரு.பையனையே பாத்துக்கிட்டு இருந்தா எப்படி!

கால்ல மருதாணி தெரியற மாதிரி நில்லு. அப்புறம் அது போட்டுதே வேஸ்ட். ஆன்ட்டி, அது மருதாணி இல்ல மெஹந்தி !

நீங்க வேணும்னா அந்த சேர் மேல ஏறி போட்டோ எடுங்க. இங்கேந்து ஒன்னும் சரியா வராது.

அவன இந்த மாதிரி தான் கண்ட்ரோல்ல வச்சிக்கணும். அதுக்கு தான் ட்ரைனிங் இது ! தம்பி இனிமே ஆப்பு தாண்டி உனக்கு !

இந்த மாலைய கொஞ்சம் நகத்தி விடுங்க. பயங்கரமா குத்துது. ஒரு நாள் தான, அட்ஜஸ்ட் பண்ணிக்கோ. இவ்வளவு செலவு பண்ணி கல்யாணம் பண்றோம். நீ என்னடானா !

மாமா, ஒரு நிமிஷம். அவர் ஒரே ஒரு போட்டோ எடுத்துடட்டும். அதுக்கு அப்புறம் அருந்ததி பாக்கலாம் !நல்ல நேரம் முடியரதுக்குள்ளார நடந்தா சரி ! நமக்கென்ன, குழந்தேள் நல்லா இருக்கணும் அவ்வளவு தான் ! கவலைப்படாதீங்கோ. நம்ம சம்ப்ரதாயாத்த என்னிக்கும் விட்டுக்கொடுக்கமாட்டோம் !

Thursday, January 8, 2009

கிச்சடி

என்னோட நண்பரோட அம்மாவுக்கு கொஞ்சம் உடம்பு சரி இல்லாம இருந்தது. அப்ப செந்தில் வண்டில வந்து இருந்தான். ஒரு மெடிசின் ஸ்ரீரங்கத்துல எந்த கடைலயும் கிடைக்கல. (வாசன் மெடிக்கல்ஸ் வந்து சேராத காலகட்டம் ) செந்தில் கிட்ட மருந்து சீட்ட கொடுத்து மெயின்காட்ல போய் பாத்துட்டு வாடான்னு சொல்லி அனுப்பினோம். வெற்றிகரமா மாத்திரையை வாங்கிகிட்டு உடனயே வந்தான். எங்கடா செந்திலா வாங்கினேன்னு கேட்டதுக்கு TV koilல உள்ள மீனாட்சி பிளஸ் மெடிக்கல்ஸ்லயே கிடைச்சிடுச்சுன்னு சொன்னான். ஒரு வாரம் கழிச்சி நான் பஸ்ல போற போது அந்த மெடிக்கல் ஷாப் பாத்தேன்.




மீனாட்சி மெடிக்கல்ஸ்.


****************************************


ஸ்கூல்ல படிக்கற போது டிராயிங் கிளாஸ் வாரத்துக்கு ஒரு பீரியட் உண்டு. அத எப்பவும் 4th இல்லாட்டி 7th பீரியடுக்கு மாத்திட்டு வீட்டுக்கு ஓடறதுலயே குறியா இருப்போம். Geomentryல ஸ்கேல் வச்சி நேர்கோடு போடவே எனக்கு வராது. சரி, டிராயிங் கிளாஸ்ல எதாவது வளைச்சி வளைச்சி வரையலாம்னா அப்ப தான் நேரா பென்சில் போகும். இந்த மாதிரி கிளாஸ் வச்சி கொடுமைபடுத்தராங்களேன்னு நிறைய வருத்தப்பட்டு இருக்கேன் ( ஒரு விதமான ப்ராக்டிகல் யூசும் இல்லையேன்னு ). ஐரோப்பால வந்து நாலு வருஷம் ஆவுது. எங்காயாவது டாய்லெட் தேடும் போது படத்த பாத்துதான் ஆம்பளை / பொம்பளை வித்தியாசம் கண்டுபுடிக்க வேண்டியிருக்கு. சில எடத்துல இவங்க வரைஞ்சி வச்சி இருக்கற படத்த பாத்து குழம்பும்போது வரைஞ்சவன் என்னையே மாதிரியே டிராயிங் கிளாஸ் 4th இல்லாட்டி 7th பீரியடுக்கு மாத்தி இருப்பானோன்னு தோணும் !

புத்தகங்களை தேடி

போன வாரம் நான் இந்தியா (திருச்சி) வந்தபோது எப்படியும் ஒரு சில புத்தகங்கள வாங்கிடனும்னு NSB ரோடு போனேன். அங்க ஒரு நாலைஞ்சு புத்தக கடை இருக்கு. ஆனா எல்லா கடைலயும் தமிழ் புத்தகம்னா பாரதியார் கவிதைகள், வைரமுத்துவோட கள்ளி காட்டு இதிகாசம், கலைஞரோட ஒரு சில புத்தகங்கள், தி ஜானகிராமனோட "மோகமுள்", "அம்மா வந்தாள்", சாண்டில்யனோட நாவல்கள் ! அவ்வளவு தான் !

தமிழ்நாட்டுல உள்ள பதிப்பகங்கள் கடைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கலையா இல்லாட்டி நம்ப மக்கள் வேற எந்த புக்கும் வாங்கமாட்டாங்களா ! ஒருவித ஏமாற்றத்தோடு சாண்டில்யனோட "கடல்புறா" மற்றும் ஆர்தர் ஹைலியோட ஒரு நாவலையும் வாங்கினேன். இன்னும் ஒரு கிலோமீட்டர் போய் இருந்தா பழைய புத்தககடையில எல்லாத்தையும் பொறுக்கி இருக்கலாம். ஊருக்கு வந்ததே மூணு நாளுக்கு ! அதுலயும் புக் வாங்க ஒரு நாள் முழுக்க அலைய வேண்டாம்ன்னு வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்.

நாலாம் தேதி சென்னை இன்டர்நேஷனல் ஏர்போர்ட்ல செக்யூரிட்டி செக் இன்னில் மூணு மணிநேரம் காத்திருப்புக்கு பிறகு வந்து உக்காந்தா எதிர்ல ஒரு புத்தககடை. அங்க நான் தேடின புத்தகத்துல ஒருசிலது கிடைச்சது.

1) ஆதவன் தீட்சண்யாவின் சிறுகதைகள்
2) சுஜாதாவின் கடைசி பக்கங்கள் (கணையாழி)
3) வாமு கோமுவின் கள்ளி
4) ராமகிருஷ்ணனின் நெடுங்குருதி

இப்போதைக்கு "கடைசி பக்கங்கள் ' படிச்சி முடிச்சுட்டேன். பயங்கர சுவாரசியமான எழுத்து. டைரக்டர் ஸ்ரீதர் மற்றும் வாலிய பத்தி சுஜாதாவோட அபிப்ராயத்தோட ஆரம்பிக்குது இந்த புக். 1965ல சுஜாதாவுக்கு தமிழ் சினிமா மேல இருந்த பற்று 2007ல சிவாஜிக்கு வசனம் எழுதறபோது மாறிபோனது ஒருவித பரிணாம வளர்ச்சியே ! (உள்ளிருந்து மாற்றம் கொண்டுவர முயலும் அனைவரிடமும் காணப்படும் முரண்பாடு என்று கூட சொல்லலாம்.)

Thursday, December 11, 2008

ஜமாத் உத் தாவா இயக்கத்திற்கு பாகிஸ்தான் தடை

இன்று பாகிஸ்தான் அரசாங்கம் (UN தடை விதித்ததற்கு பிறகு), JUD இயக்கத்தை தீவிரவாத இயக்கமாக அறிவித்துள்ளது. அந்த இயக்கத்தின் தலைவர்களை கண்காணித்து வருவதாக தெரிகிறது.

இன்று டிசம்பர் 11, 2008

பிப் 14 ம் தேதி இவ்வியக்கத்திற்கு மறுபெயர் சூட்டப்படும் என்று இந்திய உளவு நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. இந்திய அரசாங்கம் தீவிரவாதத்தை அனைத்து திசைகளிலும் எதிர்கொள்ள முடிவு எடுத்து இருக்கிறது. அதனால் நியூமுராலஜிப்படி அழிவை நோக்கி செலுத்தும் பெயராக கண்டுபிடித்து, அதை அவ்வியக்கத்திற்கு புதுப்பெயராக வைக்கவேண்டும் என்று கான்டலீசா ரைஸ் / ஹில்லரி கிளின்டனிடம் விண்ணப்பிக்க இருப்பதாக ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன.

ஆதலால் நியூமுராலஜி தெரிந்த அனைத்து இந்தியர்களும் புது பெயருக்கு உதவிடுமாறு இவ்வலைப்பதிவு மூலமாக நான் வேண்டிக்கொள்கிறேன்.

இல்லையேல், NDTV மற்றும் CNN-IBN க்கு குறுஞ்செய்தி அனுப்பலாம்.

Monday, October 20, 2008

சினிமா சினிமா - தொடர் பதிவு

இத்தொடருக்கு அழைத்த திரு ராதாகிருஷ்ணன் அவர்களுக்கும், தாமிராவுக்கும் எனது நன்றி.(திரு போடாததுக்கு மன்னிக்கணும் தாமிரா)

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

வயசு நினைப்புல இல்ல. பார்த்தால் பசி தீரும்ன்னு நினைக்கறேன்.எங்க தெருல ஒருத்தர் வீட்டுல பெரிய டயனோரா டிவி இருக்கும். அங்க தான் கூட்டத்தோட டிடில பாத்தேன்.டவுரி கல்யாணம்"திருச்சி ரம்பா தியேட்டர்ல பாத்த ஞாபகம் இருக்கு.இண்டெர்வல் கோன் ஐஸ்காக தான் சினிமா போனேன்னு நினைக்கறேன்.

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

தசாவதாரம். (நேதர்லாந்த்ல, ரோசண்டால்ன்னு ஒரு ஊருல). படத்த நிம்மதியா பாக்கவுடாம ரீல மாத்தி மாத்தி போட்டு உயிர் எடுத்தானுங்க. முன்னாடி இதே மாதிரியே வேட்டையாடு விளையாடு படத்துலயும் பண்ணினாங்க. தமிழ் இயக்குனர்கள் நான்-லீனியர் ஸ்டைல்ல படம் எடுத்தா தான் இனிமே ஐரோப்பால தமிழ் படத்துக்கு போகலாம்ன்னு இருக்கேன். (இந்த ஸ்டைல் திரைக்கதை எழுத தமிழ் எழுத்துலத்துல யாருப்பா இருக்காங்க ! )

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

டெய்லி எதாவது ஒண்ணு பாத்துக்கிட்டு தான் இருக்கோம்.அதுனால சரியா ஞாபகம் இல்ல.

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா ?

பாரத் பந்த். தெலுங்கு டப்பிங் படத்த மட்டுமே தமிழ்படம்ன்னு நினைச்சிகிட்டு இருந்த காலம்.க்ளைமாக்ஸ்ல வில்லன் இந்தியாவுல உள்ள அத்தன அணைகளுக்கும் பாம்ப் வைப்பான். ஒரு வரைபடத்த வச்சிக்கிட்டு "டேய், இதோ பாரு நைல் ரிவர். இதுல பாம்ப் வச்சி இருக்கேன். வெடிச்சா,டெல்லி காலி.இதோ பாரு தேம்ஸ் ரிவர்.இந்த பாம்ப் வெடிச்சா ஹிமாச்சல்ல உள்ள பனிமலை எல்லாம் வெள்ளத்துல உருகிடும்".இன்னிக்கு சாயந்திரம் பந்த் முடியும்போது இந்தியாவே துண்டு துண்டா ஆயிடும்ன்னு கனைப்பான். அத கேட்ட ஒரு இந்திய காளைமாடு சிலிர்த்து எழுந்து வந்து அவன கொம்பால குத்தி குதறிடும்.இந்திய இறையாண்மைக்கு பங்கம் வந்தா காளை கூட பொறுத்துகாதுன்னு எனக்கு உணர்த்தின படம்.படம் பாத்த எங்க கண்ணு முழுக்க ஒரே தண்ணி. நாங்க கிளம்பின உடன ஆப்பரேட்டர் கண்ணுல ஒரே ஆனந்த கண்ணீர்.நாங்க மூணே பேரு மட்டும் தான் அன்னிக்கு படம் பாக்க வந்து இருந்தோம் !

இதுக்கும் முன்னாடி மக்கள் என் பக்கம் வந்த போது," ராஜ் ராஜ் சாம்ராஜ்ன்னு" கத்திக்கிட்டு வீட்டுல இருக்கற அலுமினயம் பொட்டிய தூக்கிகிட்டு மாடிமாடியா குதிக்க முயற்சி பண்ணிருக்கேன்."டேய், என்னடா மேல சவுண்டு" ன்னு வந்த குரல கேட்டுட்டு,கடைசில வர வேண்டிய போலீஸ் முன்னாடியே வந்துடுச்சேன்னு வெறுப்புல திரும்பி வந்துருக்கேன்.

5. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

திருச்சி உறையூர்லேந்து அலெக்ஸ்ன்ன்னு ஒரு நடிகர் பொறந்தநாள்,தீபாவளி எல்லாத்துக்கும் "நாட்டை காக்க வந்த தலைவனே, எங்கள் குலநாயகனே"ன்னு அவரே அவருக்கு போஸ்டர் அடிச்சி ஒட்டிப்பாறு. அவர தமிழ் திரையுலகமும் / அரசியல் அரங்கமும் சுத்தமா கவனிக்க தவறியதுனால 2011 ல ஒரு முதலமைச்சர் கம்மி.இதுவே சென்னைல இருந்து இருந்தா அவருக்கு இப்படி ஒரு நிலைமை வந்து இருக்குமானு நினைச்சி பாத்து நொந்து இருக்கேன்.

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

என்னை மஹேந்திரன் படங்கள் மிகவும் கவர்ந்ததுண்டு.

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

பிலிம் நியூஸ் அனந்தன் எழுதின ஒரு புத்தகம் வாசிச்சது உண்டு. அத தவிர AVM பத்தி வந்த ஒரு புக் படிச்சிருக்கேன்.சினிமா பொன்னையா,எலிசா,லைட்ஸ் ஆன் சுனில் எல்லாம் ஆர்வமா மேஞ்சதுண்டு. இப்ப எல்லாம் துணுக்கு படிக்கனம்னா சாரு ஆன்லைன் மட்டும் தான்.

7.தமிழ்ச்சினிமா இசை?

சினிமா ரசனைல அடைஞ்ச முன்னேற்றம் மாதிரி இசைல கிராஜுவேட் ஆகாதது எனக்கு வருத்தமே. இன்னமும் "அரிதாரத்த பூசி கொள்ள ஆச" மாதிரியான பாடல்கள் தான் என்னோட டேஸ்ட். விசுன்னு எனக்கு ஒரு நண்பர் இருக்காரு. அவரும் விடாம எங்க ரூம்ல இருந்த எல்லாரையும் திருத்தறதுக்கு முயற்சி பண்ணி பாத்து இருக்காரு.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

தசாவதாரம் தவிர வேற உலக படமா ?

டி டில ஞாயிற்றுக்கிழமை மதியம் ஆக்சிடென்ட்ன்னு ஒரு படம் பாத்த ஞாபகம் இருக்கு. கன்னட படம்ன்னு நினைக்கறேன். பெண் கதாபாத்திரமே இல்லாத ஒரு திரைப்படம். செர்பிய மொழி படமான No Man's land ஆங்கில சப் டைட்டிலோட பாத்து இருக்கேன்.ரொம்ப பிடிச்சி இருந்தது (லகான் கிட்டேந்து ஆஸ்கர் அவார்ட பறிச்ச சினிமா).நிறைய ஹிந்தி மசாலா படம் பாத்து இருக்கேன். (தாரே ஜமீன் பர் உட்பட)

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

மேன்மையான நிலைல உள்ள ஒரு பொருள் கீழ தான் வர முடியும். அதுனால கொஞ்சம் வருஷம் கழிச்சி மேலேத்த வந்தாலும் வருவேன். இப்போதைக்கு ஜே கே ரித்தீஷுக்கு காம்படீடர் அவர் மட்டும் தான்.
10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
தியேட்டர்கள் எல்லாம் காலி.பைரசிய கண்டிப்பா ஸ்டாப் பண்ண முடியாது. அதுனால எதிர்காலம் கவலைக்கிடம் தான்.அனைத்து கட்சி கூட்டம் போட வேண்டிய அளவுக்கு இன்னும் போகல.

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள்,செய்திகள் எதுவுமே பத்திரிகைகள்,தொலைக்காட்சி,இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

தமிழ் சினிமாவ அடுத்த ஒரு வருஷம் தடை பண்ணிட்டா என்ன ஆகும்ன்னு கேள்வியா ! ப்ளாக் ரசிகர்களுக்கு ஜாலி தான். நல்லா பொழுது போகும். ஜ்யோவ்ராம் சுந்தர், வளர்மதி போன்றவர்கள் முதலாளித்துவ சிந்தனைக்கு எதிரா எழுதுவாங்க. (தடையை மீறி படம் பார்ப்பவர்களுக்கு ஒருவிதமான குற்றஉணர்ச்சி வரும் என்பதால்) இன்னும் சில பேரு வேலை இழந்த தொழிலாளர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்துவாங்க. சில பேரு தடைய வரவேற்று அதற்கு அறிவியல் சம்பந்தமா விளக்கங்கள் தருவாங்க.(வேறு மாநிலங்களில் தமிழ் சினிமா பார்ப்பதற்கும் /தமிழ் சினிமா தயாரிப்புக்கும் தடை இல்லைன்னு சுட்டிக்காட்டுவாங்க).ஒரு சில பேரு ஆந்திரால தமிழ் சினிமாவ தடை செய்யாம,தமிழ்நாட்டுல மட்டும் தடை செஞ்சி இருக்கறத கண்டிச்சி அறிவுஜீவித்தனமாக பேசுவாங்க.தடையையும் மீறி இன்டர்நெட்ல வரும் தமிழ்சினிமா செய்திகள பாத்துட்டு 2011முதல்வர் சரத்குமார் இண்டெர்நெட் செய்திக்கும் சென்சார் கொண்டு வரவேண்டும் என்று முழங்குவார்.

சில பதிவர்கள் சீரியலுக்கு மாறிடுவாங்க.நான் இந்த மாமி வீட்டுல சீரியல் பாத்தேன்.நீங்க எங்க ? அப்படின்னு பின்னூட்டம் போட்டுப்பாங்க.

மேலும் சில பதிவர்கள் "சினிமா பார்ப்பதை நானும் விட்டுவிட்டேன் "என்று ஒருமணிக்கு ஒரு தடவ வந்து (intermission போது )கத சொல்லிட்டு போவாங்க.

வேற என்ன ?

ஈமெயில இன்னும் அஞ்சி பேருக்கு பார்வார்ட் பண்ணாட்டி உங்களோட இதர இதர ஐயிட்டம் எல்லாம் பழுதடையும்ன்னு கிலிய கிளப்புவாங்க. அந்த அளவுக்கு இன்னும் பதிவுலகம் டீசன்சில முன்னேராதத நினைச்சி வருத்தமா இருக்கு. இந்த தொடர் பந்தயத்த நிறுத்தாம கொண்டு செல்ல நான் அழைக்கும் நபர்கள்.

1) பத்ரி - http://thoughtsintamil.blogspot.com/
2) பிரியா - http://synapse-junctionofthoughts.blogspot.com/
3) நவநீதன் - http://navaneethankavithaigal.blogspot.com/