Showing posts with label திருடுதல். Show all posts
Showing posts with label திருடுதல். Show all posts

Monday, November 23, 2009

திருடுதல்


சிறிது காலமாக உடல் பருமனாகிவிட்டதால் தினமும் இரண்டு கிலோமீட்டர் நடப்பதை ஒரு பழக்கமாக்க முயன்று வருகிறேன். சென்ற வாரத்தில் ஒருநாள் இப்படித்தான் இரவு ஏழு மணி அளவில் நடக்க ஆரம்பித்தேன். முன்னூறு மீட்டர் நடந்து இருப்பேன். தரையில் ஐந்து யூரோ கீழே கிடந்தது. சுற்றிலும் யாரும் இல்லை. பணத்தை எடுத்துப்பார்த்தேன். திருப்பிப் திருப்பி பார்த்துகொண்டே நடந்தேன்.
என்னைப்போன்றே நடைப்பழக கிருஷ்ணா பரமாத்மா தனியாக வரும்போது பணத்தை கண்டிருந்தால் என்ன செய்திருப்பார் ?

கோபிகைகளுடன் சேர்ந்து வரும்போது பார்த்திருந்தால் என்ன செய்திருப்பார் ?

பணத்தை கீழே போட்டுவிட்டுச் சென்றால் அது உரியவரைப் போய் சேருமா ?

ஐந்து யூரோவை எடுத்துசெல்வதால் யாருக்கு என்ன நஷ்டம் வந்துவிட முடியும் ? இதுவே நூறு யூரோவாக இருந்தால் என்ன செய்து இருப்பேன் ? இல்லை ஆயிரம் யூரோவாக இருந்தால் ?

நிச்சயம் ஆயிரம் என்றால் போலீஸ் ஸ்டேஷன் சென்று கொடுத்திருப்பேன்.

மாதம் இருபதாயிரம் யூரோக்கள் சம்பாதிக்கும் ஒருவரின் ஆயிரமாக இருந்தால் ?

சுத்தமாக பொறுப்பே இல்லாமல் பணத்தை தொலைத்தவனிடம் திருப்பித்தருவது
சரியா ?

எப்படிப்பட்ட பணமாக வேண்டுமென்றாலும் இருக்கட்டும். என்னுடையது கிடையாது என்றபோது எடுத்துச்சென்றால் திருடுவது தானே ?

இவ்வளவு சிறியதொகையாக இருக்கும் பட்சத்தில் ஒரு ஹைனக்கண் பியர் வாங்கி குடித்துவிட்டு மறந்துப்போவது தான் சரியான நியாயமா ? மற்ற அனைத்தும் ஒருவித moral superiority அடைவதற்கான பாசாங்கா ?

இச்சிறு தொகைக்கே முடிவு எடுக்கமுடியாமல் இருக்கும் ஒருவன்இவ்வுலகத்தில் வாழ தகுதி உண்டா ? அப்படிப்பட்ட ஒருவனுடன் சேர்ந்து வாழ்பவர்கள் சபிக்கப்பட்டவர்களா ?

இதே பணத்தை கடைகளில் யாராவது என்னிடம் தவறுதலாக கொடுத்துவிட்டால் (எனக்கு தெரியும்பட்சத்தில்) திருப்பிக்கொடுத்துவிடுவேன். பிறகு என்ன ?

அந்த பணத்தை தரையில் இருந்து எடுத்தவுடன் என்னுடையதாகிவிட்டதா ?

நானும் பலமுறை தொலைத்தவன் தானே என்று எனக்கு நானே சமாதானம். எவ்வளவு பணம் தொலைத்துள்ளேன் என்று கணக்கு செய்து அவற்றுடன் கூட்டலோ/கழித்தலோ செய்து பார்க்கிறேன். இது சரியா ?

கம்யூனிசம் பேசும் அரசியல் தலைவர்கள் பெரிய வில்லாக்களில் வசிக்கிறார்கள். எவ்வளவோ பெரிய வங்கிகளில் கோடிகோடியாக கொள்ளை அடிக்கிறார்கள். அவர்களை எல்லாம் ஒன்றும் செய்யமுடியவில்லை. இந்த ஐந்து யூரோக்களில் என்ன ஆகிவிடும் ? இது திருடுவதாக எப்படி ஆகமுடியும் ?

எனக்கு முன்பு துருக்கி நாட்டை சேர்ந்த பெண்ணாக(யுவதியாக) இருக்கவேண்டும் - நடந்துக்கொண்டிருக்கிறாள். அவளுடையதாக இருக்குமா ? அவளுடன் பேசுவதற்காக/பழகுவதற்கு இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்த நினைக்கிறேனா ? நான் எடுக்கும்போது தான் யாரும் அருகில் இல்லையே ? பிறகு ஏன் அவளுடையதாக இருக்கவேண்டும் ?

அவள் முதலில் பணத்தை பார்த்து இருந்தால் என்ன செய்து இருப்பாள் ?

அவர்களின் இறை தூதர் நபிகள் நாயகம் பார்த்திருந்தால் என்ன செய்திருப்பார் ?

பணத்தை எடுத்து வைத்துக்கொள்ள வேண்டியது தான். ஞாபகம் இருந்தால் ஒருசில நாட்களில் ஏதாவதொரு charity செய்ய பயன்படுத்தி கொள்ளலாம். இல்லையென்றாலும் ஒன்றும் குடிமுழுகி போய்விடாது. நல்லவேளையாக வீடுவந்து சேர்ந்திருந்தேன்.

ஒரு சில நாட்களில் மறந்தும்விட்டேன்.

ஆனால் இன்று அந்த துருக்கிப்பெண்ணை பார்த்தேன். எனது பர்சில் உள்ள ஐந்து யூரோ துருத்துகிறது.